சுரேஸ் பிரேமச்சந்திரன்

நமக்குபட பெருமையையும் கடமையையும் தந்துவிட்டுச் சென்றிருக்கும் வழிகாட்டி

சுரேஸ் பிரேமச்சந்திரன்

எமது தோழர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணியில் செயலாளர் நாயகத்துடன் வாழ்ந்ததென்பதும், அவருடன் இணைந்து தமிழ் பேசும் மக்களின் இன்னல்களைத் தீர்க்க ஓர் ஸ்தாபனத்தை தோற்றுவித்ததென்பதும், அவருடன் இணைந்து தமிழ்பேசும் மக்களுக்காக பணியாற்றியதென்பதும் பெருமைப்படக்கூடியது.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல்வேறுபட்ட இயக்கங்கள் தோன்றி மறைந்ததும், பலவேறுப்பட்ட தலைமைகள் உருவானதும் உண்டு. இதில் தோழர் நாபாவின் தலைமைத்துவம் என்பது தனித்துவம் வாய்ந்தது.

தலைமைத்துவம் என்பது இராணுவ வீர சாகசங்களைக் கொண்டும் கொலை செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கையைப் கொண்டும் கணிப்பிடப்படுவதல்ல. மாறாக, ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக உறுதியுடன் போராடுதல், மக்களின் நலன்களின் அடிப்படையிலிருந்து முடிவுகளை எடுத்தல், இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனித நேயமும், மனிதப் பண்பும், இவைதான் தலைமைத்துவத்தை உருவாக்கும்.

இவ்வகையில் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தோழர் நாபாவைத் தவிர்ந்த ஒரு தலைவரை என்னால் பார்க்க முடியவில்லை.

விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை மாத்திரமல்ல. அடிமட்டத்தில் உள்ள மக்கள் சுரண்டலில் இருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும், சாதி ஒடுக்கு முறைகளிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். பெண்ணடிமைத்தனம், பிராந்திய வேறுபாடுகள் போன்றவற்றிற்கும் முடிவு கட்டப்பட வேண்டும் என்பதில் அவர் மிகவும் அக்கறையாக இருந்தார்.

அவர் எவ்வெற்றை எல்லாம் தனது தோழர்களுக்கும், மக்களுக்கு போதித்தாரோ அவற்றை அவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்தார்.
அது மாத்திரமல்ல, அரசியல் சமூக விடுதலையை நோக்கி அவர் மக்களை அணிதிரட்டினார். மக்களே எதனையும் தீர்மானிக்கும் சக்தி என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.
இம்மக்கள் ஒழுங்கான முறையில் அணி திரட்டப்படுவதன் மூலமே அவர்களின் விடுதலை சாத்தியமென்பதில் பூரண நம்பிக்கை கொண்டிருந்தார். அதறிகாகத் தானே முன்னின்று பல அமைப்புக்களை உருவாக்கினார்.

யாழ்ப்பாணத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட கூலித் தொழிலாளர்கள் மத்தியலும், மலையகத்தில் அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளர் மத்தியிலும் அவரது வேலைகள் மையம் கொண்டிருந்தன. தேசிய விடுதலைப் போராட்டத்தில் எல்லா வர்க்கங்களைச் சார்ந்தோரும் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்த அதேவேளை தொழிலாளர், விவசாயிகளே இப்போராட்டத்தைக் கொண்டு நடத்தக் கூடியவர்கள் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.

தனிநபர் பயங்கரவாதம், கடைந்தெடுத்த இராணுவவாதம் என்பவற்றிற்கு அவர் முற்றுமுழுதாக எதிராக இருந்தார். மக்கள் இல்லாத மண்ணை நாம் நேசிக்கவில்லை, மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் இது தோழர் நாபா, தோழர்களுக்கு அடிக்கடி கூறும் ஓர் வாசகம். இவ்வாசகத்துள் பொதிந்துள்ள கருத்தை நாம் விளக்கித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்பதல்ல. ஆனால் முழுமையான இராணுவவாதத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இவ்வாசகம் தெட்டத் தெளிவாகப் போதித்து நிற்கின்றது.

அதே சமயம், கண்மூடித்தனமான இராணுவ வாதத்தால் இன்று தமிழ்பேசும் மக்கள் எதிர்கொண்டுள்ள ஈடு செய்ய முடியாத இழப்புக்களையும் நாம் நேரடியாக காண்கின்றோம்.

தோழர் நாபாவும், எமது ஸ்தாபனமும் இடதுசாரி சித்தாந்தத்தைக் கொண்ட கம்யூனிஸ்டுகள். இவர்கள் வெற்றி பெற்றால் சர்வாதிகாரம்தான் ஏற்படும், ஜனநாயகம் அழிந்து விடும், கோயில்களை இடித்து விடுவார்கள், சமய வழிபாடுகளை கைக்கொள்ள முடியாதென்று தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறும் சிலர் கூக்குரல் போட்டார்கள். ஆனால் ஜனநாயகம் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் தோழர் நாபா.

ஆரம்பத்திலிருந்து அவரது இறுதி மூச்சு வரை ஸ்தாபனத்தின் உள்ளும் வெளியேயும் ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாக இருந்தார். ஜனநாயக விரோதச் செயல்கள் எங்கு நடந்தாலும் அவர் கண்டிக்கத் தவறியதில்லை.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் உட்கட்சி ஜனநாயகம் பாதுகாக்கப்பட்; ஒரேயொரு அமைப்பு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது. சகல இயக்கங்கள் உள்ளும் காட்டுத்தர்பாரும், கொலைகளும் மலிந்திருந்த வேளையில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மட்டுமே ஜனநாயகப் போக்கைக் கடைப்பிடிக்கும் பாதையில் முன்னோடியாக இருந்தது.

இதேபோல் எதேச்சாதிகாரத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற வெறியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கொலைவெறியை ஏனைய இயக்கங்களுக்கு எதிராக கட்ட விழ்த்து விட்டபோது, அதற்கெதிராக துணிச்சலுடன் போராடி வருபவர்களும் நாங்கள்தான்.

இயக்கங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும், மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதில் தோழர் நாபா உறுதியாக இருந்தார். இயக்கங்களை நிராகரிப்பது மக்களுக்குள்ள சுதந்திரமே தவிர, ஆயுதம் தூக்கியவர்கள், இராணுவ ரீதியில் பலவானவர்கள் என்பதற்காக, ஏனைய இயக்கங்களை என்பதற்காக, ஏனைய இயக்கங்களை அழித்தொழிப்பதை, அவர்கள் இயங்க விடாமல் தடை செய்வதை அவர் கடுமையாய் எதிர்த்தார். அவற்றிற்கெதிராக பல்வேறுபட்ட மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.

இந்திய அமைதி காக்கும் படை வடகிழக்கிற்கு வந்ததின் பின்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் கண்மூடித் தனமாக கொலைகள் செய்யப்பட்டதென்று எம்மேல் குற்றம் சுமத்தினார்கள். பேசுவது ஜனநாயகம், ஆனால் நடைமுறையில் ஜனநாயக விரோத செயல்களையே செய்கின்றார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் நாம் எம்மை விமர்சித்தவர்களையோ, ஏனைய இயக்கங்களையோ தடை செய்யவில்லை. பாசிச நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு கூட்டத்திற்கு எதிராகத் தான் நாம் செயல்பட்டோம். வடக்கு கிழக்கில் அமைதியையும், ஜனநாயகத்தையும் குழி தோண்டிப் புதைக்க முற்பட்ட சர்வாதிகார கூட்டத்திற்கு எதிராக செயல்பட்டோம். அரசியல் தூரநோக்கின்றி அநாவசியமான யுத்தம் ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் அழிவுக்கு காரணமாக இருந்த போர் வெறியர்களுக்கு எதிராக செயல்பட்டோம். மக்களை வாய்பேச விடாது மௌனிகளாக்கி, காட்டு தர்பாரை நடாத்திவந்த ஒரு கூட்டத்திற்கு எதிராக செயல்பட்டோம்.

அடிப்படையில் மக்களின் ஜனநாயக உரிமைகளபை; பாதுகாப்பதற்காக, அநாவசிய யுத்தத்தை நிறுத்துவதற்காக, மக்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக செயல்பட்டோம் என்பது உண்மை.

எனவே, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (.பி.ஆர்.எல்.எப்) என்பது தோழர் நாபாவின் வழிகாட்டலில், தனது கொள்கைகளுக்கு முரணாகப் போகவில்லை. ஆனால் நீதிக்கும் நியாயத்துக்குமான எமது போராட்டத்தில் சில தவறுகள் நடந்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

தோழர் நாபாவிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது ஏராளம். அவர் ஒரு புலமை வாய்ந்த தத்துவவாதியாக இருக்கவில்லை. ஆனால், மிகத்தெளிவான அறிவு படைத்த, அரசியல் தூரநோக்கு கொண்ட சிறந்த தலைவனாக இருந்தார். மக்கள் படும் கஷ்டங்களை எமக்குப் போதித்தார். அவர்களை எப்படி அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பது என்பதில் எமக்கு சிறந்த வழி காட்டியாக திகழ்ந்தார். நாம் மக்களிடமிருந்து கற்றுக்கொண்டதை செழுமைப்படுத்தி மீண்டும் மக்களுக்கு போதிக்கின்றோம் என்று கூறுவார். அதுதான் உண்மையாகவும் இருந்தது.

அவர் மக்களுடன் மக்களாயும், தோழர்களுடன் தோழராயும் இருந்தார். தோழமை என்பதற்கு அவர் ஒரு உதாரண புருஷனாகத் திகழ்ந்தார். அவர் தனது புத்திசாலித்தனத்தைக் காட்டிக்கொள்ளவோ, இல்லையேல் தம்முடைய அறிவுத் திறமையை தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கோ விவாதங்களில் கலந்துகொண்டது கிடையாது. மாறாக, நடைமுறையில் போராட்டத்தை சரியான திசைவழியில் கொண்டுசெல்லவும், தோழர்களை அரசியல், ராணுவ ரீதியாக வளர்த்தெடுப்பதற்கும் ஏற்ப பல்வேறுபட்ட ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொண்டிருப்பதை நான் அறிவேன். அது மாத்திரமல்ல, வெளிநாடுகளில் போராட்ட அனுபவம் அரசியல் அனுபவம் பெற்ற தலைவர்கள், தோழர்களுடன் அவர் மணிக்கணக்கில் கலந்;துரையாடுவார். அவர்களின் அனுபவங்கள் எமது போராட்டத்திற்கு எவ்வகையில் பிரயோசனப்படும் என்பரை அறிவுறுத்துவார்.

தோழர் நாபா அதிகம் பேச மாட்டார் என்று கூறுவார்கள். உண்மை, தேவையில்லாமல் அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால் குறைவாகப் பேசினாலும் கூட அது ஆழமாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருக்கும். மிகவும் இக்கட்டான சமயங்களில் மிகத் துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் கைத்தேர்ந்தவராக இருந்தார். அதே சமயம் தனது முடிவுகளுக்கான ஆணித்தரமான காரணங்களையும் அவர் கொண்டிருப்பார். தான் எடுத்த முடிவுகளை மிகவும் எளிய முறையில் தோழர்களுக்கு விளங்க வைப்பதையும், அவற்றை ஏற்றுக் கொள்ள வைப்பதிலும் மிகவும் சிந்தது விளங்கினார். அதே சமயம் தோழர்களின் கருத்துக்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்.

தமிழ் பேசும் மக்களின் போராட்ட வரலாற்றில் தோழர் நாபாவின் பங்கும் .பி.ஆர்.எல்.எப். இன் பங்களிப்பும் அளப்பரியது. ஆரம்பத்திலிருந்து இயக்கங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்பதற்கான முழு முன் முயற்சிகளையும் எடுத்தார். இதன் மூலம் .பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ், டெலோ போன்ற அமைப்புகளை ஆரம்பத்தில் ஓர் ஐக்கியப்பட்ட அமைப்புக்குள் கொண்டு வந்தார். இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளையும் உள்ளடக்கிய ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்கினார்கள். தோழர் நாபாவின் முன்முயற்சியாலேயே இது சாத்தியமாயிற்று.

இவ் ஐக்கிய முன்னணியை தோற்றுவித்ததின் மூலதே திம்புவில் நடந்த பேச்சு வார்த்தையின் போது சகல அமைப்புக்களும் ஒரே குரலில் பேசக் கூடியதாக இருந்தது.

ஐக்கியம் என்பது மேல் மட்டத்தில் மாத்திரம் இருந்தால் போதாது, ஸ்தாபனத்தின் சகல மட்டங்களிலும் ஐக்கியம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதே போல் ஸ்தாபனங்களுக்கிடையில் ஐக்கியத்தின் அவசியம் பற்றி எமது ஸ்தாபனத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் எடுக்கப்பட்டன.

ஆனால் தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற ஸ்தாபனம் ஐக்கியம் என்பதை தந்திரோபாயமாகவே பாவித்து வந்தார்கள்.

இதனால் மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய முன்னணியில் இருந்து வெளியேறினார்கள். அது மாத்திரமல்லாமல், சகல அமைப்புக்களையும் அழித்தொழிப்பதிலும் ஈடுபட்டு வந்தால் ஈழ விடுதலைப் போராட்டமே சின்னாபின்னப்படுத்தப்பட்டது.

ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றியடைய வேண்டும் எனில், ஈழ விடுதலைப் போராட்டத்தின் தேவையையும், அது உருவான வரலாற்றுத் தன்மையையும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அசர்கள் மத்தியில் இருந்து அதற்கான ஆதரவு திரட்டப்படல் வேண்டும் என்பதில் தோழர் நாபா மிகத் தீவிரமாக இருந்தார். இதற்காக சிங்களப் புத்திஜீவிகள், முற்போக்கு சக்திகள், ஜனநாயகவாதிகள் மத்தியில் மிகப் பரந்தளவில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறும் வாய்ப்பு ஏற்பட்டது.

அது மாத்திரமல்ல, நாங்கள் வெறும் தமிழ் இன வெறியர்களோ அல்லது பிரிவினைவாதிகளோ அல்ல. மாறாக சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக பேராட்டுபவர்கள் என்பதை நிலை நிறுத்தினார். இதனால் தோழர் பத்மநாபா உட்பட 23 சிங்கள தோழர்களுக்கு எதிராக, அவர்கள் அரசாங்கத்தைக் கவிழ்த்து கம்யூனிஸ ஆட்சியைக் கொண்டுவரச் சதி செய்கின்றார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டது. அவர் கொல்லப்படும் வரை அவர் மீதான சதி வழக்கு வாபஸ் பெறப்படாமலேயே இருந்தது.

இவ்வளவு நடந்தும் கூட அவர் இறுதிவரை தான் கொண்ட கொள்கையிலிருந்து மாற வில்லை. அது மாத்திரமல்லாமல், ஈழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில், சில இயக்கங்கள் கண் மூடித்தனமாக சிங்கள மக்களைக் கொலை செய்தபோது அவற்றை வன்மையாக கண்டித்தார்.

இதே போன்று மலையக மக்கள், முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கான சுயாட்சி சபைகள் உருவாக்கப்படல் வேண்டும் என்று குரல் கொடுத்தவர். தனது சொல்லாலும், செயலாலும், தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, முஸ்லிம், மலையக மக்கள் மத்தியிலும் பேராதரவைப் பெற்றுக் கொண்டார்.

எவ்வளவு தூரம் தமிழ் இயக்கங்களுக்கிடையில் ஐக்கியம் உருவாக வேண்டும் என்று விரும்பினாரோ அவ்வளவு தூரம், சிங்கள இடது சாரிகளுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்றும், அதே போல் சிங்கள, தமிழ் இடதுசாரிகள், முற்போக்கு சக்திகளுக்கிடையிலும் ஐக்கியம் வேண்டும் என்று விரும்பினார். இதற்கு பல்வேறு பட்ட முயற்சிகள் எடுத்தார்.

இதேபோல் இனவெறி, நிறவெறி, சியோனிசம், ஏகாதிபத்தியம் போன்றவற்றிற்கு எதிராக விடாப்பிடியான போராட்டம் நடாத்தினார். ஈழ விடுதலைப் போராட்டம் என்பது ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தின் ஒரு பகுதி என்றும், பிரகடனப்படுத்தினார்.

பாலஸ்தீன விடுதலைப் போராட்டம், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டம், நிக்கரகுவா போன்ற வடுதலைப் போராட்ட அமைப்புகளுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார். அவர்களுடைய போராட்டத்திற்காதரவாக எப்பொழுதும் இருந்து வந்தார். அவர்களது போராட்டம் வெற்றி பெற .பி.ஆர்.எல்.எப்.ஆல் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.

இதன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவை அவர்களிடமிருந்து பெற்று வந்தார்.

அதே சமயம் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கக்கூடிய சோசலிச நாடுகளுடனும் எமது உறவைப் பேணி வந்தார். இந்தியாவில் இருக்கக்கூடிய முற்போக்கு சக்திகள், கம்யூனிஸ்ட்டுக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார். பிரத்தியேகமாக சி.பி.., சி.பி.(எம்)., யு.சி.பி.. இன்றும் பல முற்போக்கு கட்சிகளுடனும் எமது உறவை வளர்த்திருந்தார். தமிழகத்தில் இருக்கக்கூடிய முற்போக்கு இலக்கியவாதிகள் கலைஞர்கள் போன்றவர்களுடனும் அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஈழ மக்களின் விடுதலைக்கு, அவர்கள் முழு உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ்வதற்கு இந்திய அரசின் ஆதரவு முழுமையாக தேவை என்பதை வலியுறுத்தி வந்தார். இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு குணாம்சம் எமக்கு பேருதவியாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.

இதன் அடிப்படையில் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்திய அரசை வென்றெடுப்பதில் அவர் ஆர்வம் காட்டினார். ஏனைய இயக்கங்களைப்போல் நேரத்திற்கு ஒரு கொள்கை பேசாமல் மிகவும் தெளிவானவராக இருந்ததால் இந்திய அரசுடனும் ஒரு நல்லுறவை வளர்த்துக் கொண்டார். முக்கியமாக அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் எமது போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருந்தது.

எம்மை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட புலிகளும்கூட தோழரின் துணிச்சலான அரசியல் முடிவுகளுக்கும் அவரது அரசியல் சாணக்கியத்துக்கும் அஞ்சி நடுங்கினார்கள். இதனாலேயே இறுதியில் அவரைக் கொலை செய்தார்கள்.

அழிவுகள் நிறுத்தப்படல் வேண்டும், ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும், தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும், வாழ வேண்டும் என்;பதே அவரது தாரகமந்திரமாக இருந்தது. இதனடிப்படையிலே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்து அதனடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாண சபை உருவாக ஆதரவாக இருந்தார்.

ஆனால் புலிகளதும், சறீலங்கா அரசினதும் நடவடிக்கைகள் அதனை சின்னாபின்னமாக்கியது. புலிகளின் அரசியல் வங்குரோத்துத்தனமும், சிறீலங்கா அரசின் கபடத்தனமான பேச்சுகளும், இன்று இலட்சக்கணக்கான அகதிகளை உருவாக்கியுள்ளதுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு பல நகரங்கள் முற்றுமுழுதாக அழிவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. அது மாத்திரமல்ல, எமக்கு கிடைத்த சில உரிமைகள் கூட எமது கையை விட்டுப் போனதற்கும் இவர்களே காரணம்.

தோழர் நாபாவுடன் சமகாலத்தில் அரசியலில் ஈடுபட்டவன் என்ற வகையிலும், அவருடன் இணைந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை ஸ்தாபித்தவன் என்ற அடிப்படையிலும், அவருடன் இணைந்து சகல நடவடிக்கையிலும் அவரைப் பற்றி என்னால் முழுமையாக அறியக் கூடியதாக இருந்தது.

மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே நாம் இவ்வமைப்பைக் கட்டிவளர்த்தோம், எத்தனை நூறு கிலோ மீற்றர்கள் நாம் கால்நடையாக நடந்திருப்போம், பட்டினி என்பது எமது ஸ்தாபனத்தின் அன்றாடப் பிரச்சினையாக இருந்தது. ஆனால் தோழர் நாபாவின் விடாமுயற்சியும், கொள்கை மேல் கொண்ட விடாப்பிடியான நம்பிக்கையும், தோழர்களின் வீரமிக்க தியாகங்களும், அவர்களது அளப்பரிய பங்களிப்புகளுமே எமது ஸ்தாபனத்தை வளர்த்தது.

தோழர் நாபாவை முதன்முதலாக 1975 ம் ஆண்டு லண்டனில் சந்தித்தேன். அன்று தொடக்கம் அவருடன் ஓர் நண்பனாக, தோழனாக, அவரின் மாணவனாக இருந்துள்ளேன்.

1977ம் ஆண்டு தோழரும் நானும் இன்னும் சில தோழர்களும், இராணுவப் பயிற்சி பெறுவதற்காக லெபனான் சென்றோம். அங்கு பாலஸ்தீன முகாம் ஒன்றில் முழுமையான பயிற்சி பெற்றோம். அதன் பின்னர் நேரிடையாகவே தாயகம் திரும்பி எமது மக்களை அணிதிரட்டும் வேலைகள் செய்து வந்தோம்.

அன்றிலிருந்து இன்றுவரை நாம் சந்தித்த கஷ்டஙகள், நெருக்கடிகள் ஏராளம். ஏச்சுககள், பேச்சுக்கள், கிண்டல்கள், கேலிகள், ஏளனங்கள் ஏராளம். இவை தவிர எமது ஸ்தாபனத்தில் இருக்கக் கூடிய ஜனநாயக உரிமைகளை துஷ்பிரயோகம் செய்து ஸ்தாபனத்தையே சின்னாபின்னமாக்க முனைந்த சில சுயநல சக்திகளின் செயற்பாடுகள், ஏனைய இயக்கங்களின் இராணுவ மிரட்டல்கள், இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் எமது ஸ்தாபனத்தைக் கட்டிக்காத்து அதனை சரியான திசைவழியில் கொண்டு சென்ற பெருமை தோழர் நாபாவையே சாரும்.

தமது சுயநல நோக்கங்கள் ஸ்தாபனத்துக்குள் நிறைவேறாததால் சிலர் வெளியேறினார்கள். ஆனாலும்கூட ஸ்தாபனம் உறுதியாக இருந்தது. இது தோழரின் தலைமைத் துவத்தால் மாத்திரமே சாத்தியமானது என்பதை என்னால் திட்டவட்டமாகக் கூற முடியும்.

மரியாதை என்பது அவர் மேல் ஏற்பட்ட பயத்தால் அல்லளூ அவரிடம் இருந்த அரசியல் நேர்மை, சரியான திசைநோக்கிய அவரது வழிகாட்டும் திறன், இதன் மூலம் அவர் தோழர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய விதம், அவரது ஏளிமை, ஒவ்வொரு தோழர்களுடனும் பழகிய விதம், இவற்றினாரேயே ஏற்பட்டது.

தோழரிடமிருந்து நாம் கற்றுக் கொண்டவை ஏராளம். இன்றும் கற்றுக் கொள்ள வேண்டியது அதை விட அதிகம். இம் மலரின் சில பக்கங்களுள் அவரது சேவையை, அவர் மக்களுக்கு ஆற்றிய பணியை, அவரது அரசியல் வாழ்க்கையை அடக்கிவிட முடியாது.

மேலே நான் குறிப்பட்டது அவரைப் பற்றிய சுருக்கமே. தோழர் நாபாவின் வரலாறு என்பது ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறுளூ ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரலாறுளூ எனவே இதனை சில பக்கங்களுள் அடக்கிட முடியாது.
தோழரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர் கொள்ளத் திராணியற்றவர்கள், ஏனைய இயக்கத் தலைவர்களையும் இயக்கங்களையும் அழிப்பதன் மூலம் தம்மை நிலைநிறுத்தலாம் என்று கருதுபவர்கள் தோழர் நாபாவையும், கிருபாவையும், சங்கரியையும், இன்னும் பல தோழர்களையும் கொன்றிருக்கலாம்.

ஒரு நாபாவைத் தான் இவர்களால் கொல்ல முடிந்தது. ஆனால் அவர் உருவாக்கிச் சென்ற ஆயிரமாயிரம் நாபாக்களை இவர்களால் கொல்ல முடியாது.
அவரின் கொள்கையை, சித்தாந்தத்தை இவர்களால் கொலை செய்ய முடியாது. எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, அவர் விட்ட பணியை முன்னெடுத்துச் செல்ல அவரது பாதையைப் பன் தொடர நாம் ஆயிரக்கணக்கில் இருக்கின்றோம்.

பாசிஸ்டுக்கள் குறுகியகால வெற்றிகளை ஈட்டலாம். ஆனால் பாசிசம் வென்றதாக சரித்திரம் கிடையாது