சா.செ. சந்திரகாசன்


உழைப்புக்கும், எளிமைக்கும்,
தியாகத்திற்கும் அவர் ஒரு முன்மாதிரி


சா.செ. சந்திரகாசன், இணைப்பாளர், ஈழத் தமிழர் பாதுகாப்புக் கழகம்.

ஈழம் காலத்தின் கட்டாயம், அதன் விடுதலை அடைந்தே தீருகின்ற வரலாற்றின் விடிவு. கிழக்கே வெளுத்துவரும் அப்புலர்காலைப் பொழுதுக்கு நிகழ்வுகளை உந்திச் சென்று சாதனை புரிந்த தளபதிகள் பலர். சோதனைகளுக்குத் தங்களையே பலியாக்கிக் கொண்ட தோன்றல்கள் பலர். அவருள் குறிப்பிடத்தக்கவர் திரு. பத்மநாபா.

திரு. பத்மநாபா இளம் பிராயத்திலேயே பொதுவுடமைத் தத்துவத்தை தன் பாதையாக ஏற்றுக்கொண்டார். சர்வதேசியத்தை வலியுறுத்தும் மார்க்சீயக் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் பாடுபடத் தன்னைத் தயார்படுத்தினார். இலங்கையிலும், இந்தியாவிலும், உலகின் பல பாகங்களிலுமுள்ள மார்க்சீயவாதிகளை தமிழ்த் தேசியப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்க முன்வரச் செய்தவர்களுள் திரு. பத்மநாபாவும் முக்கியமானவர்.

ஈழத்தமிழினத்தின் எழுச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக விளங்கிய பயங்கரமான நோய் சாதிக் கொடுமை. இக்கொடுமையை ஒழிக்க பாடுபட்டுழைத்தவர் திரு. பத்மநாபா. இக்கொடுமையைக் களைய இவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் நலிந்த பிரிவினரிடையே நம்பிக்கை ஒளியைத் தூண்டின. இதனால் அம்மக்களில் பெரும்பாலானோர் ஈழப்போராட்டங்களுக்கு உறுதுணையாக விரைந்தனர்.

எழுபதாம் ஆண்டுகளின் மத்தியில் மலையகத் தமிழர்களிடையே திரு. பத்மநாபா பணிபுரியத் தொடங்கினார். ஈழப் போராட்டங்களில் அவர்களும் ஓரங்கம் என்பதை நிலைநிறுத்த அவர் பணி பேருதவியாக இருந்தது.

ஓரினத்தின் விடுதலைக்கான போராட்டங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்காவிட்டால் அவை வெற்றி பெறப் போவதில்லை என்பது நடைமுறை உண்மை. ஆகவே, ஈழத்தமிழர் போராட்டத்தை அனைத்துலக அரங்கிலே இடம் பெறச் செய்ய திரு. பத்மநாபா பாடுபட்டார்.

பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவரல்ல திரு. பத்மநாபாளூ செயல் ஒன்றே அவர் கருத்தாக இருந்தது. அளவோடு அவசியமறிந்துதான் பேசுவார். கடும் வார்த்தைகளை அவர் கையாண்டதாக எவரும் கூறமாட்டார்கள். எவரையும் தோழர் என்றே அழைப்பார். தான் சார்ந்த இயக்கத்தில், தன்னை ஒத்தவர்களுடன் எத்தகைய தன்மையில் உரையாடுவாரோ- பழகுவாரோ அதே முறையிலேதான் இயக்கத்தின் அடி மட்டத்திலுள்ளவர்களுடன் வாஞ்சையோடு பேசுவார்-பழகுவார். ஏற்றத் தாழ்வுகளை அவர் ஏற்பதில்லை. அதே வேளையில் எடுத்த பணியை முடித்துவைப்பதற்காக எப்பாடுபடவும் தயாராய் இருப்பார். கால நேரம் பாராது எந்த வேளையிலும் செயலுக்குத் தயாராகவிருந்தார்.

ஆடம்பரமோ அகம்பாவமோ அவரிடம் இருந்ததில்லை. எளிமையான வாழ்க்கையையே அவர் ஏற்றுக்கொண்டார். துன்பப்பட்டோரின் துயர் துடைக்கத் துடிக்கும் உள்ளம் கொண்டவர் திரு. பத்மநாபா. 1978ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சூறாவளி தாக்கிச் சின்னாபின்னப் படுத்திச் சீரழித்தபோது அந்தப் பிரதேச மக்களின் துயரங்களில் பங்கு கொள்ள ஒரு இளைஞர் பட்டாளத்தையே கொண்டு சென்று அவராற்றிய தொண்டு அப்பகுதி மக்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

திரு. பத்மநாபாவின் சிறந்த குணங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது பதவி ஆசைக்கு ஆளாகாத அவருடைய பண்பு.

அன்னையின் விடுதலைக்காகப் போர்க்கொடி தூக்கிப் புறப்பட்ட தனயர்கள் வெவ்வேறு கொள்கை, வெவ்வேறு மார்க்கம் என்று தனித்தனி அணி வகுத்தாலும், கொண்ட கொள்கைக்காகவேனும் ஒன்றுபட வேண்டும் என்ற அவாக் கொண்டுழைத்தார்.

அவர் கொலை செய்யப்பட்டது கொடுமையானது. அந்தக் கொலைபாதகத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வெட்கப்படுவதிலிருந்தே அது செய்திருக்கக் கூடாது - செய்தது தவறு என்பதை அவர்களே உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அப்படியானால் தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் இது எவ்வளவு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணரலாம்.

சகோதரச் சண்டையும், இயக்கக் கொலையும் தாம் தமிழீழ விடுதலை வெற்றியைத் தள்ளிப்போடுகின்றன என்று மற்றவர்கள் சொல்வதை இனியாவது ஈழப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் உணர்ந்து திருந்துவது நல்லது.

திரு. பத்மநாபாவின் வாழ்வு உழைப்புக்கும், எளிமைக்கும், தியாகத்திற்கும் ஒரு முன்மாதிரி. அவர் படுகொலை செய்யப்பட்டது போராட்டத்தின் ஏற்றத்திற்கு முரண்பாடானது. அவற்றிலிருந்து படிப்பினை பெற்று, ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.