எம்.வி. சுந்தரம்


கொள்கை வேறுபாடுகளை அரசியல் குரோதமாகப் பார்க்காதவர்


எம்.வி. சுந்தரம், இந்திய விடுதலை இயக்கப் போராளி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முன்னாள் செயலாளர் நாயகம் க. பத்மநாபாவின் 39வது பிறந்த நாளான 1990 நவம்பர் 19ல் அவரது நினைவு மலர் வெளிவரப் போவதாக அறிந்து, இந்திய விடுதலை இயக்கப் போராளிகளில் ஒருவனான என் நினைவுகள் சிலவற்றை மறைந்த மாவீரன் தோழர். கே. பத்மநாபா நினைவாக சமர்ப்பிக்கின்றேன்.

இலங்கை தமிழ் இன மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் விடுதலை இயக்க அமைப்புகள் பல சென்னையில் இருந்து வருவதால் நானும் ஒரு விடுதலைப் போராளி என்ற தோழமை உணர்வோடு, அந்த அமைப்புத் தலைவர்களுடனும் ஊழியர்களுடனும் உறவு கொண்டு உரையாடி வந்தேன். அவ்வாறு நான் நேரில் சென்று பார்த்தவர்களில் தோழர். கே. பத்மநாபாவும் ஒருவர்.

பாதிப்புக்குள்ளாகி, எனக்கிருந்து வந்த அரசியல் பொறுப்புகள், சமுதாயப் பணிகள் பலவற்றிலிருந்து முழுமையாக விடுவித்துக் கொண்டு தற்போது மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகின்றேன்.

இந்திய விடுதலைப் போராளியான என்னை மறவாது பாச உணர்வுடன் அடிக்கடி நானிருக்கும் இடம் தேடிவந்து என்னுடைய கருத்துக்களை அமைதியாகக் கேட்டு மிகவும் அகமகிழ்ந்து விடைபெற்றுச் செல்லும் உன்னதமான ஒரு இளைஞர் தோழர் கே. பத்மநாபா. நான் எழுதிய விடுதபை; போராளியின் வாழ்க்கைப் பயணம் என்ற நூலை என்னிடம் நேரில் வாங்க வேண்டும் என்று வந்த ஒரு அரசியல் பண்பாளர். யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய், யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய் வாழ்ந்திட விரும்பி அதனையே வாழ்க்கையாக கொண்டவர் தோழர் பத்மநாபா என்று உணர்ந்தேன்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் கொள்கை, அரசியல் நிலைப்பாடு பற்றி பிறர் என்ன கூறுகிறார்கள் என்று அறிந்துக்கொள்ள பிறர் கூறும் அரசியல் கருத்துக்கள் பற்றி உன்னிப்பாகவும், அடக்கமாகவும் கேட்டு கிரகித்துக் கொள்ளும் தன்மை உடையவர் தோழர் பத்மநாபா என்ற உண்மையைக் காண முடிந்தது.

சோஷலிஸ சமுதாயப் பற்றுதலும், இந்திய வெளிநாட்டுக் கொள்கையின் மீது பற்றுதலும், ஜனநாயக ஆர்வமும் உள்ளவர். கொள்கை வேறுபாடுகளை அரசியல் குரோதமாகக் கருதிவிடக் கூடாது என்ற நிதானமான தெளிவான நிலைபாடு உள்ளவர்.

இலங்கையில் உள்ள தமிழ் இன மக்களும், சிங்கள இன மக்களும் சமத்துவமாக வாழும் ஜனநாயக அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு எதிராக இலங்கை அரசியல் ஆதிக்க வெறியர்கள் இனவெறிக் கலவரங்களைத் தூபமிட்டு வளர்த்து வருகிறார்கள் என்பதே தோழர் பத்மநாபாவின் கருத்து என்பதை அவரிடம் நடத்திய உரையாடல்களிலிருந்து நான் தெரிந்து கொண்டேன்.

அதே போன்று, இலங்கையில் உள்ள தமிழ் இன மக்களின் உரிமைகளுக்காக - ஜனநாயக சம நிலைக்காக - தமிழர், சிங்கள மக்களின் ஒற்றுமைக்காக போராடி வரும் அரசியல் விடுதலை இயக்க அமைப்புகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற நாட்டமும், செயல்பாடும் உள்ளவர். அதே சமயம் ஜனநாயக வாக்குரிமை மூலமாக வெற்றி காண முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளவர். இதனையே தமிழக முதல்வர் முன்பு வைத்த பிரேரணை பின்வருமாறு கூறுகிறது.

இலங்கைத் தீவில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் ஜனநாயக உரிமைகளுடனும், சுதந்திரமாகவும், சுயாட்சி அதிகாரங்களுடனும் வாழுவதற்குரிய நிலைமைகளை ஏற்படுத்தும் முகமாக திட்டவட்டமான அரசியல் தீர்வு ஒன்று முழுமையாகவும், முறையாகவும் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று பிரேரணை தெளிவு படுத்திக் கூறுகிறது.

மேலும், அதிகாரப் பரவலாக்கல் என்ற தலைப்பில் அனைத்து விவகாரங்களிலும் இந்திய மாநில அரசுகளும் இருக்கக்கூடிய அதிகாரங்களுக்கு குறையாத அளவு வடக்கு கிழக்கு மாகாண அரசிற்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படல் வேண்டும். நிர்வாக, நிதி உறவுகளும் இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கிடையில் உள்ள அளவிற்குக் குறையாது இருத்தல் வேண்டும் என்று ஸ்தூலமாக விளக்கப்படுகிறது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஏற்று அமுல் நடத்தவே வடக்குகிழக்கு மாகாண அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டதாகவும், அதன் விளைவாக 600க்கும் மேற்பட்ட முன்னணி உறுப்பினர்களைத் தியாகம் செய்ய நேரிட்டது என்றம் பெருமையுடனும் அமைதியுடனும் தோழர் கே. பத்மநாபா தன் உரையாடலில் கூறுவார்.

இத்தகைய அரசியல் பண்புள்ள தோழர் பத்மநாபா இந்திய அரசியல் சட்டம் உதயமானபிறகு, 1951 நவம்பர் 19-இல் இலங்கை யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை என்ற இடத்தில் திரு. கந்தசாமி அவர்களின் புதல்வனாகப் பிறந்தார்.

1989ஏப்ரல் 10ல் சென்னையில் திரு. ஏ.ஈ.சுப்பிரமணியம் என்பவரின் புதல்வி செல்வி ஆனந்தியை மணந்தார். திருமணமாகி பதினான்கு மாதங்கள்தான் நிறைவு பெற்றன. சம்பந்தி என்ற உறவுள்ளவர் சென்னை நகரில் 1990 ஜுன் மாதம் 19ம் தேதியன்று அவரது இல்லத்தில் சுடப்பட்டு இறந்தார். சோகம் சென்னை நகரைக் கவ்வியது.

கொலை மேற்கொண்டொரின் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து என்று குறள் நெறி கூறுகிறது. ஆம், அரசியல் அதிகார ஆதிக்க வெறியால் இலங்கை அரசு தமிழ் இன மக்களுக்கு அநீதி விளைவித்தது. எதிராக சிங்கள இனவெறியைத் தூபமிட்டு வளர்த்தது. தமிழ் மக்களின் சுதந்திர ஜனநாயக உரிமைகளைப் பெறவிடாது அடக்குமுறைக் கொடுமைகள் செய்தது. இத்தகைய அரசின் அரசியல் நடவடிக்கை, அன்று சிங்கள இனவெறிக் கொலைஞரை விட மிகக் கொடுமையாக இருந்தது. இதனால் தமிழ்மொழி - இனப்பாச - வரலாற்று மரபு எனும் உணர்வோடு இலங்கையிலிருந்து அகதிகளாக அன்று வெளியேறிய இலங்கை தமிழ் இன மக்களுக்கு உதவிட இந்திய மக்களும், தமிழ் மக்களும் முன் வந்தனர்.

அவ்வாறு தமிழ் நாட்டிற்கு வந்த பல்வேறான அரசியல் விடுதலை இயக்கத் தலைவர்களில் தோழர் கே. பத்பநாபா ஒருவர். இவரின் சம்பந்தி உறவு நாடாக தமிழகம் மாறியது - அவரின் திருமணத்திற்குப் பிறகு. ஆனால் மறுவீடு வந்த மணமகனை பிணமகனாக படுபாதக கொலைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ் மக்கள் தலை குனிந்தனர்.

அந்தோ! இலங்கை சிங்கள இனவெறி கொடிது! அதனிலும் கொடிது இனவெறித் தூபமிட்டு கொடுமை செய்திடும் இலங்கை அரசு. அதனிலும் கொடிது இன்றைய தமிழ் நாட்டில் பரவலாக அஞ்ஞாதவாசம் செய்து வரும் மனிதத் தன்மையும், மனித நேயமும் இல்லாத பாதக பயங்கரவாதம். தமிழினப் போர்வையில் பதுங்கிய பயங்கர கொலை பாதகர்களின் நடைமுறைச் செயல்பாடு.

புவிமிசைத் தருமமே அரசியல் அதனிலும், பிற இயல் அனைத்திலும் வெற்றி தரும் என வேதம் சொன்னதை முற்றும் பேண முற்பட்டு நின்றார் ? பாரத மக்கள்.

இதனால் படைஞர் தம் செருக்கொழிந்து உலகில்
அறம் திறம்பாத கற்றோர் தலைப்படக் காண்போம்

என்று வெண்சங்கு ஊதிய பாரதி காணும் பாரத நாட்டில் அதிலும் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டில்

மனிதர்களைக் கொலை செய்வதே அரசியல் தொழிலாகக் கொண்டுள்ள புலையர்கள், உன்னத இளைஞர் தோழர் பத்மநாபாவையும் விடுதலை இயக்கத் தோழர்கள் சிலரையும் கொலை செய்துவிட்டார்கள். இத்தகைய சிந்தனையோடு மனக்கவலையில் மூழ்கினேன்.

கொலை வினயராகிய மாக்கள் புலைவினயர்
புன்மை தெரிவாரகத்து என்ற குறள் நெறி கொலைபாதகர் பற்றி இனம் காண வைத்தது.

வாழ்க! தோழர் பத்பநாபாவின் தியாகம்!