டாக்டர். இரா. சனார்த்தனம்


போற்றுவோம் - தோழர் பத்மநாபாவை


டாக்டர். இரா. சனார்த்தனம், எம்.ஏ., பி.எச்.டி., தலைவர். உலகத் தமிழ் இளைஞர் பேரவை.

தோழர் பத்மநாபா, ஈழப் போர் வரலாற்றில் மறக்க முடியாத மாவீரன். தளரா தளபதிகளில் ஒருவர். உருவத்திற்கேற்ற உயரம், பளிச்சிடும் ஒளிக்கண்கள், அடையாளம் காட்டும் தாடி, செயலேமுதல் என்பதால் அளந்து பேசும் சொற்கள், பத்மநாபாவை நினைவுபடுத்தும்.

என் நினைவுகள்.........

தம்பிமார்களுக்கு சென்னையில் இடம் தேடிக் கொடுத்த அந்த ஆரம்ப நாட்கள் - தம்பியரோடு தங்க நண்பர் கபூர் வீட்டில், புரசைவாக்கத்தில் தங்க அனுப்பியதும், அடிக்கடி சந்தித்த அந்த நாட்கள், கோவையில் பட்டதாரி தொகுதித் தேர்தலில் நின்றபோது, தானும் தம்பியருடன் வந்து அலுவலகத்தில் நாட்கணக்கில் தங்கி உதவிய அந்த நாட்கள்.

இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு, இலங்கைத் தமிழருக்காக நான் நடைபயணம் மேற்கொண்டு சென்னை அடைந்தபோது, அடையாறு பாலத்தருகே எந்த அறிவிப்பும் இன்றி வந்து கட்டி அணைத்துப் பாசத்தைப் பொழிந்த அந்த நாட்கள், அமரர் அமிர்தலிங்கம் மறைவுகேட்டு யாழ்ப்பாணம் நான் அடைந்த அந்த சோக நேரத்தில் சந்தித்த நாட்கள், அவை ஆண்டுகள் உருண்டாலும் எனக்கு அழியாத நினைவுகள்.

பாழ் செய்யும் உட்பகை வெறுத்தாய், பகைவன் நமக்கு சிங்கள இனவாத அரசேதான் என அடையாளம் காட்டினாய், இயக்கங்கள் இடையே தோழமை வேண்டினாய், போராடும் இளைஞர்கள் ஒன்றாகும் நாள் அந்நாளே உன் ஆசைக்கனவு அரங்கேறும் நாள்.

இன்று உன் மனைவிக்கு, உடன் பிறந்தோருக்கு, இந்த மலரில் பலரும் பாராட்டும் வரிகளே - தேடி வைத்துச் சென்றுள்ள செல்வங்கள்.

போற்றுவோம் தோழர் பத்மநாபாவை.