ஜனா கிருஷ்ணமூர்த்தி


சமுதாயத்திற்காக வாழ்ந்தவர்

ஜனா கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய துணைத்தலைவர், பாரதீய ஜனதா கட்சி

உலகில் அனைவரும் பிறக்கின்றனர், வாழ்கின்றனர், இறக்கின்றனர். பெரும்பாலோர் தங்களுக்காகவும், தங்கள் குடும்பங்களுக்காகவும் உற்ற உறவினர்களுக்கும் வாழ்கிறார்கள். அநேகர் அமரிக்கையாக கிடைத்த ஓய்வுநேரத்தில் சமுதாயத் தொண்டு ஏதேனும் ஒன்றில் ஈடுபடுகின்றனர். பாராட்டத்தக்கது.

ஆனால் பலரோ, தான் பிறந்த பொன்நாட்டிற்காகவும், தன்னை ஈன்றெடுத்த சமுதாயத்திற்காகவும் தன் வாழ்க்கை பூராவையும் அர்ப்பணித்துக் கொள்வது மட்டுமல்லாது, அப்பணிக்காக இன்னுயிரையும் ஈந்திட முன்வரத் தயங்குவதில்லை. இப்பலரிலும் சிலருக்கு தலைமை தாங்கிச் செல்லும் தகுதியும் சேருகிறது.

இச்சிலரே ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு தலைமுறையிலும் முன்னோடிகளாக விளங்கி மக்கள் உள்ளத்தில் அழியாநிலை பெற்றுவிடுகிறார்கள். இம் மாதிரி சிலரில் பத்மநாபா அவர்களும் ஒருவர் எனக் கருதுகிறேன்.

அவரை நேரில் சந்தித்தது கிடையாது. அவரது வரலாற்றை அறிந்தது கிடையாது. ஆனால் அவரது மரணம் அவரை அறியாதவர்களுக்குக் கூட அவரை அறிமுகப்படுத்திவிட்டது.

அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் அவரது மக்களுக்காக அரும்பாடுபட்டுள்ளார். அவர் கையாண்ட முறைகளை ஏற்காதவர்கள் இருப்பார்கள். ஆனால் அவருடைய நோக்கத்திற்கும் தொண்டிற்கும் களங்கம் கற்பிக்க முடியாது.

ஸ்ரீலங்கா தமிழ் இளைஞர்கள் ஆயிரமாயிரம் பேர் தமிழர் நலன்காக்க உயிர் துறந்துள்ளனர். ஆனால் இத்தியாகமெல்லாம் அங்குள்ள தமிழ்மக்களுக்கு உரிய உரிமைகளை அளித்து, அவர்களை நலன் காக்கப் பயன்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த இளைஞர்கள் அனைவருமே பல கோஷ்டிகளாகப் பிரிந்து சகோதரச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் இந்த பலவீனத்தை மதுரையில் நடந்த டெஸோ மாநாட்டில் வாஜ்பாய் சுட்டிக்காட்டினார். இவர்கள் ஒன்றுபட வேண்டினார்.

ஒன்றுபட்டிருந்தால், பத்மநாபா அவர்கள் இன்று நம்மிடையே இருப்பார். ஸ்ரீலங்கா தமிழர்களின் குறிக்கோளும் கோரிக்கைகளும் பெருமளவில் நிறைவேறி இருக்கலாம்.

பத்மநாபா அவர்களுக்கு என் இதயபூர்வமான அஞ்சலி.