என்.டி. வானமாமலை


நினைவில் நிலைத்து நிற்கும் இலட்சிய வீரன்.


என்.டி. வானமாமலை (வழக்கறிஞர்)
மாநில செயலாளர், இந்திய-சோவியத் கலாச்சார் கழகம்


அடக்க ஒடுக்கமான தோற்றம், எளிமையான நடையும், உடையும், தீர்க்காலோசனையைக் குறிக்கும் கூரியக் கண்கள், அர்த்தமற்ற பேச்சுக்கு இடங்கொடுக்காத மௌனம் - தோழர் பத்மநாபாவைப் பற்றி நினைத்தால் கண்முன் வரும் காட்சிகள் இது.

இளம் வயதிலேயே ஈழத் தமிழ் மக்கள் துயர் துடைக்கும் இயக்கத்தில் அவர் சங்கமமானார். மாணவனாக இருக்கும் பொழுதே மாணவர்களை தட்டி எழுப்பி ஒன்றாக இணைத்து அவர்கள் நலன்காணப் பாடுபட்ட அவரை அவரது தந்தையார் மேற்படிப்பிற்காக லண்டன் மாநகர் அனுப்பினார்.

இங்கிலாந்தில் அவர் அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் ஆதரவை ஈழத் தமிழர் இயக்கத்திற்கு பெறுவதோடு அல்லாமல், அங்கு கிளை அலுவலகங்களை நிறுவி செயல்பட்ட பல்வேறு விடுதலை இயக்கங்களுடனும் மனித உரிமை இயக்கங்களுடனும் தொடர்பு கொண்டார். சிங்களப் பேரினவாதம் என்ற விஷயத்தைக் கக்கி பாமர சிங்களவர்களுக்கும் தமிழனர்களுக்குமிடையே வெறுப்பiயும், வெறியையும் தூண்டி, அதன் பகைப்புனலிலே கொடும் அடக்கு முறையை சிங்கள அரசும் அதன் ஆதரவாளர்களும் கட்டவிழ்த்து விடுவதை உலக அரங்கில் அவர் அம்பலப்படுத்த முனைந்தார். அத்துடன் கூட பல்வேறு ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுடன் ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தை இணைப்பது அவசியம் எனவும் அவர் கருதினார்.

உலகளாவிய பார்வை கொண்ட பத்மநாபா, பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடனும் தன்னை இணைத்துக்கொண்டார். சிங்கள அரசாங்க பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் இயக்கத்தைக் கட்டிவளர்க்க இது அவருக்கு துணை நின்றது. லெபனானில் அவர் பெற்ற பயிற்சி வீண் போகவில்லை. அங்கு போர்களத்தில் யூதர்களிடையே ஏகாதிபத்திய போக்கையும் வெறித்தனத்தையும் வளர்க்கும் சியோனிசவாதிகளுக்கு எதிராக சமர்புரிவதில் அவர் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் ஈழப் புரட்சி அமைப்பை (ஈரோஸ்) அவர் சார்ந்திருந்தார்.

ஈரோஸின் தலைமையின் மீது மதிப்பிழந்த அதன் பல உறுப்பினர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை அமைத்த காலத்தில் அதன் தலைமைச் செயலாளராக பத்மநாபா தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் கடைசி மூச்சுவரை அப்பொறுப்பை அவர் வகித்தார்.

ஈழ மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அவர் அயராது அரும்பாடுபட்டார். மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள், அறிஞர்கள் அனைவரையும் ஈர்த்து இணைக்கும் இயக்கமாக விடுதலை இயக்கம் திகழ வேண்டும் என்பது அவரது இலட்சிய நோக்கம்.

தமிழ் மக்கள்-முஸ்லீம்களும், இந்துக்களும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பதில் அவர் பெரும் அக்கறை காட்டினார்.

ஈழ மக்களிற்கு எதிரான கொடுங்கோன்மையை அயராது எதிர்த்த பத்மநாபா, சிங்கள எதிர்ப்பு வெறிக்கு இடங்கொடுக்க மறுத்தது குறிப்பிடத் தக்கது. சிங்கள மக்களுக்கு எதிரான இனவெறி நடவடிக்கைகளை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

கூட்டச்சேரா இயக்கத்தை கட்டி வளர்ப்பதில் தலைமை தாங்கி ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு புதுவழிவகுத்த பாரதத்தை நேசநாடாக பத்மநாபா கருதியதில் வியப்பில்லை.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் வடகிழக்கு மாகாணத்தில் தமிழர் அரசு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் பயனாக ஏற்பட்டபோது பத்மநாபா முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தது அவர்; இலட்சிய உறுதியை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தௌ;ளத் தெளிவாக எடுத்தக் காட்டியது. மக்களிடையே பாடுபட்டு இயக்கத்தை கட்டும் பணியை தொடர்வதே முக்கியம் என அவர் கருதினார். பதவி அதற்கு குறுக்கே நிற்கும் என்பதால் அதனை ஏற்க அவர் விரும்பவில்லை. பதவிகளை ஏற்கும் பொறுப்பை தன் சகாக்களுக்கு அளித்தார்.

அவரது பரந்த நோக்கும் மக்களை எதிர்நோக்கிய பயங்கர பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவருக்கு இருந்த தணியாத ஆர்வமும், எல்லாவற்றிற்கும் மேலாக பதவியை புறக்கணித்ததும் பாரத சுதந்திர இயக்கத்தின் தந்தை மகாத்மா காந்தியை நினைவுபடுத்துகின்றது. இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில் அவர் விரும்பி இருந்தால் எந்தப் பதவியும் அவரைத் தேடி வந்திருக்கும். ஆனால் அரை நிர்வாண காந்தியோ அரை நிர்வாணப் பாமர மக்களிடையே ரணகளத்தை ஏற்படுத்தி, சர்வ நாசத்திற்கு வழிகோலிய மதவெறித் தீயை அணைப்பதையே தன் தவிர்க்கமுடியாத பணியாகக் கொண்டார்.

காந்தி பிறந்த தேசத்தில் காந்தி மாண்ட முறையிலேயே, குண்டுகளுக்கு இரையாகி தன் இலட்சியத் துணைவர்கள் பன்னிருவருடன் உயிர் துறந்தார் பத்மநாபா.

நாற்பது ஆண்டைக்கூட எட்டிப்பிடிக்காத பத்மநாபா ஒரு வருடத்திற்கு முன் தான் காதலித்த ஆனந்தியை மணந்தார். அவரையும் அவருடன் தோளோடு தோள்நின்ற நிராயுதபாணிகளான இளம் இயக்கத் தலைவர்களையும் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற கொலைபாதகர்களையும் அவர்களைத் தூண்டியவர்களையும் வரலாறு மன்னிக்கவே முடியாது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபாவிற்கு அஞ்சலி செலுத்து முகத்தான் வெளியிட்டுள்ள சிறு வெளியீட்டில்- பத்மநாபா, எமது பிரதான எதிரி புலிகள் அல்ல, சிங்களப் பேரினவாத அரசே என வலியுறுத்துவார். அவர்களைக் கூட ஐக்கியப்பட்டுப் போராட அழைத்தார் எனக் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்;. சுதந்திர நல்வாழ்விற்கான போராட்டத்தில் அனைவரையும் ஒன்றுபடுத்துவது அவசியம். தவறான பாதையைப் பின்பற்றுவோர் பின்னாலும் பெரும்பகுதி மக்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்கலாகாது. அத்தகைய இயக்கத்தினரையும் ஒன்றிணைத்து, தவறுகளைப் போக்கி முன்னேறும் மார்க்கம் காண்பதே வெற்றி வாகை சூடுவதற்கான பாதை.

பத்மநாபா மறைந்துவிட்டார்.

ஆயினும் பத்மநாபாவின் நினைவு நீங்கவே நீங்காது.
பத்மநாபாவின் லட்சியங்கள் அழியவே அழியாது.

வாழ்க பத்மநாபாவின் நாமம்.

பத்மநாபாவின் லட்சியங்களை நிறைவேற்றுவதே பத்மநாபாவிற்கு செய்யும் அஞ்சலி.